Saturday, December 24, 2011

அம்பிகாபதி திரைப்படத்திலிருந்து பெறப்பட்ட கவிகள்

அம்பிகாபதி அமராவதிக்கு எழுதும் கடித ஓலை

அன்பே அமரா!
ஆடற் கலைமயிலே அரண்மனைப் பூங்குயிலே
பாடல் இலக்கணமே பைங்கிளியே

தூண்டிற் புழுவாக்கி என்னைத் தவிக்கவைத்து
மீண்டும் வரமாட்டேன் என்று விளம்பிவிட்டாய்

வேடிக்கை ஊடல் விளையாட்டு என்று எண்ணினேன்
வினையென்றுணர்ந்தேன் இன்று விழிநீரில் நீந்துகின்றேன்

மறக்கலா மென்றாலோ மனதைத்தான் நீதிருடி
திறக்கவொண்ணாக் கூட்டுக்குள் சிறைவைத்துவிட்டாய்

அல்லும் பகலுமெனை அணுவணுவாய் வதைக்காதே
கொல்லும் மருந்திருந்தால் கொண்டுவந்து தந்துவிடு

----------------------------------------------

அம்பிகாபதி, அமராவதியை நினைத்துப் பாடுவது

அம்புலியைக் குழம்பாக்கி
அரவிந்த இரசமோடு அமுதும் சேர்த்து
இன்பநிறை முகமாக்கிக்

கயலிரண்டைக் கண்ணாக்கி
மன்னன் ஈந்த பைங்கிளியே!
அயலொருவர் கண்படுமோ என்றஞ்சி
பயத்தோடுன்னை கங்குலிலே காண்பதல்லால்
கணப்பொழுதும் இணைபிரியாக் காலம் என்றோ?

--------------------------------------------

அம்பிகாபதி, அமராவதியைப் பார்த்துப் பாடும் முதலிரண்டு வரிகளின்
பொருள் மாறுபடுமாறு, அடுத்த ஈரடிகளைக் கோர்த்துக் கொட்டிக் கிழங்கு விற்கும் கிழவியை நினைத்துக் கம்பர் பாடுவது

இட்டஅடி நோவ எடுத்தஅடி கொப்பளிக்க
வட்டில் சுமந்து மருங்கசைய - கொட்டிக்
கிழங்கோ கிழங்கென்று கூவுவாள் நாவில்

வழங்கோசை வையம் பெறும்
--------------------------------------------

பேரின்பப் பாடல்கள் நூறு பாட வேண்டும் என்ற சவாலை ஏற்று, அம்பிகாபதி பாடுவதாக அமைந்தது

சிந்தனை செய் மனமே - தினமே
சிந்தனை செய் மனமே - செய்தால்
தீவினை அகன்றிடுமே


சிவகாமி மகனை ஷண்முகனை
சிந்தனை செய் மனமே - செய்தால்
தீவினை அகன்றிடுமே

சிவகாமி மகனை ஷண்முகனை
சிந்தனை செய் மனமே - மனமே ஏ...


செந்தமிழ்க்கருள் ஞான தேசிகனை - செந்தில்
கந்தனை வானவர் காவலனை குகனை
சிந்தனை செய் மனமே - செய்தால்
தீவினை அகன்றிடுமே

சிவகாமி மகனை ஷண்முகனை
சிந்தனை செய் மனமே - மனமே


சந்ததம் மூவாசை சகதியில் உழன்றனை
சமரச சன்மார்க்க நெறிதனை மறந்தனை
அந்தகன் வரும்போது அவனியில் யார் துணை
ஆதலினால் இன்றே

அருமறை பரவிய சரவண பவகுகனை
சிந்தனை செய் மனமே - செய்தால்
தீவினை அகன்றிடுமே

சிவகாமி மகனை ஷண்முகனை
சிந்தனை செய் மனமே - மனமே ஏ...                                            (1)


வடிவேலும் மயிலும் துணை - சொல்
வளமார்செந் தமிழால் சந்ததமும் கந்தனைப் பாட
வடிவேலும் மயிலும் துணை


நடராஜன் அருள்பாலன் நான்மறை தொழும் சீலன்
தடமேவும் பொழில்சூழும்

தணிகை வாழும் பரம ஞான குருபரன்
வடிவேலும் மயிலும் துணை


தமிழ்மாலை தனைச்சூடுவான் - கொன்றைத்
தளிர்மாலை மலர்மாலை ஜெபமாலை யுடன்சந்தத்
தமிழ்மாலை தனைச்சூடுவான்


தாபமிகு வெப்பு வாதமொடு பித்த
மானபிணி மொய்த்து உடம்போடுசாருமுயிர் துன்ப சாகரமு ழன்று
சாதனைஇ ழந்து வருந்தாமுன்தாளை யளித்திட வேணு மெனத்துதி
பாடருண கிரிநாத னழைத்திட
தயவுடன் இசைந்து அருள்மழை பொழிந்து
முத்தைத்தரு பத்தித் திருநகையென
முதலடி உரைத்த தழைத்த கருணையை
நினைந்து நினைந்து கவிமலர் தொடுத்த

தமிழ்மாலை தனைச் சூடுவான் - கொன்றைத்
தளிர்மாலை மலர்மாலை ஜெபமாலை யுடன்சந்தத்
தமிழ்மாலை தனைச் சூடுவான்                                                      (2)


சற்றே சரிந்த குழலே துவளத் தரளவடம்
துற்றே யசையக் குழையூச லாட துவர்கொள் செவ்வாய்
நற்றே னொழுக நடன சிங்கார நடையழகின்
பொற்றேரிருக்கத் தலையலங்காரம் புறப்பட்டதே               (3)

மகாகவி காளிதாஸ் திரைப்படத்திலிருந்து பெறப்பட்ட கவிகள்

தங்கமே தாமரை மொட்டுக ளாகித் தலையெடுக்க
குங்குமம் தோய்ந்த முகப்பினில் வண்டு கொலுவிருக்க
பங்கயன் விந்தைப் படைப்பாகி நிற்கும் பசுங்கொடிமேல்
பொங்கியே பூத்த முழுநிலா வண்ணம் புறப்பட்டதே!

அடிபெருத்து நுனிகுவிந்த பனிமலை யின்மேல்
முடிகருத்த கார்முகிலே மொய்த்திடும் போதில்
படையெடுத்தே வானுலகோர் பார்த்து மகிழ்வார்
உடைநெகிழ்ந்த பூமகளின் உடலழ கென்றே!

பண்பட்ட நெஞ்சிலே புண்பட்டதோ என்ன துன்புற்றதோ?
விண்பட்ட புகழிலே கறைபட்டதோ நீதி விழியற்றதோ?
அன்புற்ற நட்பிலே கண்பட்டதோ? நேசம் அழிவுற்றதோ?
இன்புற்ற காளியின் அருள்பட்டதே! இன்னல் முடிவுற்றதே!

நேயக் கவிக்குயிலே! நீயிருந்த பூங்கிளையைக்
காயவைத்துப் போனதென்ன காரணமோ? - நீயறியப்
பொல்லாப் பழிகூறும் பொய்யர் விழியெதிரில்
நில்லா திருக்க நினைத்து.

பிறப்புற்றேன் காளியிடம் பேரன் புற்றேன்
   பேச்செல்லாம் கவிமழையாய்ப் பெருகும் ஞானம்
வரப்பெற்றேன் செல்வத்தின் வளமும் பெற்றேன்
   மன்னரொடும் சரிசமமாய் மகிழும் வண்ணம்
சிறப்புற்றேன் காதல்மணம் சேர்க்க வந்த
   சிறுமதியாள் பழிச்சொல்லைச் செவியுற் றேன்நான்
வெறுப்புற்றேன் வாழ்வினிலே விரக்தி யுற்றேன்
   விதிமுடிவுத் தேவதையே விரைந்து நீவா!

அறியாத மாந்தர்களே! சாவைக் கண்டு
   அஞ்சிடுவார் அழுதிடுவார்! ஆத்மீ கத்தின்
கரைகாணும் ஞானியரோ உயிருக் கென்றும்
   அழிவில்லை என்றெண்ணி இருப்ப துண்டு
முறையான பெரும்பணியான் சாத னைகள்
   முடிப்பவரோ புகழுடலாய் நிலைப்ப துண்டு
கறையான பழையஉடல் களைந்தே மீண்டும்
   கலங்கமில்லாக் குழந்தைகளாய்ப் பிறப்போம் வாராய்!